எங்கள் பரீட்டா கார்ப் நண்பர்கள்!
நீங்கள் இவர்களைப் பார்த்திருக்கக்கூடும் உங்கள் கவனம் வசீகரிக்கும் ஆளுமையாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் இவர்களைப் பார்த்திருப்பீர்கள். .
அவர்கள் எல்லோரது உயரமும் சராசரிக்குக் குறைவுதான். உடலளவில் மட்டுமல்ல; மனதிலும் தான். புறத்தே உரையாடலும் குறைவுதான். பல கனமான விஷயங்களைக் கிரகிக்க முடியாமலும் விழுங்கி தம் வயப்படுத்திக்கொள்ள முடியாமலும் எப்போதும் ஒரு அவஸ்தைத் திணறல். ஏதோ தொண்டை அடைப்பான் நோய் தாக்குண்டவர்களைப் போல் அவர்களது காட்சித் தோற்றம். வியாபகக் குறைவால், தன் வெளி குறுகி, அதன் நான்கு எல்லையிலும் தடித்த சுவரெழுப்பி அதற்குள்ளேயே பத்திரமாய் வாசம். பிறத்தியானின் பிரவேசம் அத்துமீறலாகவே புரிந்துகொள்ளப்படும்.
அவர்களது ரத்தக்குழாய்களும், வலிப்பு கண்டு, வயதை மீறிய, தடிமனும், கனமும், குறுக்கமும் கண்டு, ரத்த சுழற்சி குறித்த சந்தேகங்களையும், குழப்பங்களையும் எழுப்பும். தேக்கம் பிதுக்கத்திலும், பெயர்தலிலும், கசிவிலுமாக முடியும். அவர்களை மீறிக் கட்டுப்பாடிழந்த நிலையில் ஏதோ வெற்றிக் களிப்பில் பித்தம் தலைக்கேறியர்களைப்போல் தங்கள் நடத்தைகள் குறித்த அவதானிப்பு ஏதுமின்றி அலைவர்.
எல்லோரும் ஒரே பிரதேசத்திலிருந்து வந்தவர்களைப்போல் ஒருவரையொருவர் அண்ணே அண்ணே என விளிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. விசேஷ அர்த்தமற்ற மிகச் சாதாரண விளிதான். தான் குள்ளமாயும் பருத்தும் இருப்பதால் பிறத்தியான் அண்ணணாகிவிடுகிறான். மற்ற ஊர்களில் பிள்ளைகள் நான்கு மாதங்களில் குப்புறத் திரும்பினால் இங்கே கதையே வேறு. எட்டு மாதம் பிடிக்கும்; நடக்க ரெண்டு வருஷம்; வாய் திறந்து மழலைப் பேச மூன்று வருடம். தலை பெருத்த தலைப் பிரட்டைகள் போல்; வயிறும் சூணா வயிறுதான். உள்ளங்கையிலும் பாதத்திலும் எப்போதும் வியர்த்தபடி. ஓடியாடி விளையாடாமல் உட்கார்ந்தபடியே தேங்கிக் கிடப்பர் சோம்பி. புதிதோ,புதியவரோ, விஷய கனமோ, எதையும் எதிர்கொள்ள முடியாமல், மனதிற்குப் பரிச்சயமான முகத்திற்குப் பின்னால் ஒளிந்துகொள்ளலே அடிக்கடி நிகழும். புதியதின் நிழல் கூட அச்சுறுத்தும்.
விழித்தெழுந்தேன் முழங்காலொன்று காணலை” எனும் கூத்தனின் கவிதை வரிகள் நினைவுக்கு வரும் இவர்களைக் கண்டால். அடிக்கடி காட்சிப் பிறழ்வு இவர்கள் மனத்தில்- தாங்கள் முழங்காலுக்குக் கீழாய் ஊனமுற்று முட்டிகளால் நடப்பதுபோல். விநோத ஊனமுற்ற சிந்தனைகள். மன முதிர்ச்சியின்மைக்குக் கையும் காலும் நட்டுவைத்தது போல் தான் எல்லாம். விளையாட்டையே இழந்த குழந்தைமை. புதிதில் ஆர்வமின்மை, மாற்றத்தைக் கண்டுகொள்வதில் ஆர்வமின்மை.
தேவையை மீறிய உரத்த குரல் பேச்சும், கூச்சமும், குழப்பமும் சூழலோடு பொருத்திக்கொள்வதில் சிரமமுமே தினசரிப் பாடு. மூப்பு கூட இரண்டாம் குழந்தைமையே. மறதி எல்லையற்று; தன் வீட்டு கதவிலக்கம் தொடங்கி எல்லாமே மறதி. பொருட்படுத்த வேண்டாத விஷயங்களில் சந்தேகம், கவலை, முடிவெடுக்க இயலாமை. தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்கும் சாமர்த்தியமின்மை. இந்த இரண்டாம் குழந்தைமை ஆறாம் ஜார்ஜின் நீதிமன்றம்” சிறுகதை மடத்திராமனை நினைவூட்டுகிறது. அவன் குழந்தையாய் இருந்து, பெரியவனாகி, வளர்ந்து, மூப்பெய்தி, மீண்டும், பல் விழுந்து, முடிகொட்டி தவழ ஆரம்பித்து, குழந்தையாகி பாதுகாப்பாய் கருவறைக்குள் பிரவேசிப்பதுபோல்.
சதா தன்னம்பிக்கையிழந்து பேசிக்கொண்டிருக்கும் சிறார்களை, வளர்ந்தும் குழந்தைகளை, வளரவே, முதிரவே இயலாதவர்களின் இந்தப் பேச்சை செவி மடுத்திருக்கிறீர்களா?
தனது ஆருயிர் நண்பன் இறந்துகொண்டிருக்கிறான்; மற்றவர்களும் தன்னைத் தனியே விட்டுவிட்டு போய்விடக்கூடும். அச்சம்.
தன்னையே எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள், விமர்சிக்கிறார்கள்.
தன்னிடம் மிச்சம் இருப்பதெல்லாம் கொள்ளை போகப் போகிறது
நான் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து விட்டேன்.
என்னுடல் பார்க்க அருவருப்பய் இருக்கிறது. மூலத் தீவினையாக இருக்குமோ?
தான் தொட்ட காரியங்களெல்லாம் தவறாகவே முடிகிறது. தன்னால் வெற்றிகொள்ள முடியாது.
என் மரணம் சமீபத்துவிட்டது. கால்கள் வெட்டப்பட்டுவிட்டன.
தீயின் பேச்சரவம் கேட்டு நடுங்குகிறேன் சிறு சத்தமும் எனக்குத் தாளவில்லை
என்னால் படிக்க இயலவில்லை. வாய் குளறாமல் பேசவும் முடியவில்லை
சிரமமிருக்காது உங்களுக்கு இனி இவர்கள் யாரெனப் புரிந்துகொள்ள! செல்லமாய் நாங்கள் பரீட்டா கார்ப் என அழைக்கிறோம் இந்த நண்பர்களை. இவர்களைப் புரிந்துகொண்டு நட்பு பாராட்டுவதில் பெரும் உற்சாகம் இருக்கத்தான் செய்கிறது.