Wednesday, 15 January 2014

உளவியல் நந்தவனத்தில் சிறகடித்துப் பறக்கும் ஹோமியோ வண்ணத்துப் பூச்சிகள்

உளவியல் நந்தவனத்தில் சிறகடித்துப் பறக்கும் ஹோமியோ வண்ணத்துப் பூச்சிகள் (அல்லது)

ஹோமியோபதியின் மீதான உளவியலின் தாக்கம்.

1916ல், அமெரிக்க ஹோமியோ மேதை ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் மரணிக்கும் வரை, ஒவ்வொரு துயரரின் நோய் அறிதலிலும், அதற்குப் பொருந்தி வரும் ஒத்த மருந்தினைக் கண்டுபிடித்தலிலும் மனக் குறிகளுக்கு சிறப்பான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.

1955 ஆம் ஆண்டு ஸ்டட்கார்ட்டில் நடைபெற்ற ஹானெமனின் 200வது பிறந்த நாள் விழாவில் சர்வதேச ஹோமியோபதி லீகின் தலைவர் வில்லியம் கட்மன், அதிகாரபூர்வமாக ஃப்ராய்டின் கண்டுபிடிப்பான உளவியல் பகுப்பாய்வுக்கும், ஹோமியோபதியின் அடிப்படை விதியான ”ஸிமிலியா ஸிமிலிபஸ் க்யூரண்டர்” (ஒத்ததை ஒத்தது நலமாக்கும் விதி) கொள்கைக்கும் இடையில் உள்ள ஒற்றுமை குறித்துப் பேசினார். அன்றிலிருந்து, தொடர்ச்சியாக, பல படி நிலைகளில் ஹோமியோ உளவியல் ஒரு பயன்பாட்டுக் கொள்கையாக வளர்ச்சியடைந்தது.

அர்ஜெண்டீனிய ஹோமியோபதியர் தோமஸ் பாப்லோ பாஸ்சிரோ, ஃப்ராய்டால் முன்மொழியப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கட்டங்களான, வாய்த்தேக்கம், குதத்தேக்கம், குறித்தேக்கம் போன்ற கருதுகோள்களின் அடிப்படையில் ஹோமியோ மருந்துகளின் குணங்களை விளக்கினார்.

ஆல்ஃப்ரெட் ஆட்லரின்(காம்பென்ஸேஷன்) ஈடுகட்டுதல் கொள்கை வில்லியம் கட்மனால் ஹோமியோபதி மருந்துகளின் குணபாட நூல்களில் விளக்கப்பட்டது.
சமகாலத்தவரான, விட்மாண்ட், கார்ல் கஸ்டவ் யூங்கின் அடிப்படைக் கருதுகோள்களின் அடிப்படையில் (அனிமா, அனிமஸ் ஷாடோ, ஆர்க்டைப்ஸ்) ஹோமியோ மருந்துகளை ஒரு புதிய புரிதலுக்குத் தயார் செய்தார். பல்ஸட்டிலா, லைக்கோபோடியம், நேட்ரம் மூர் ஆகிய ஹோமியோ மருந்துகள் ஒவ்வொன்றும் ஒரு ஆர்க்டைப்பாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

பின்னாட்களில், உளவியல் நிபுணர் எரிக் எரிக்ஸனின் அடையாளச் சிக்கல் ஒரு பெரும் சக்தியாக ஹோமியோ உளவியலுக்குள் புகுந்தது.
எரிக்ஸனின் மகாத்மா காந்தியின் ஆளுமை பகுப்பாய்வினைப் போலவும், ஆபிரகாம் மாஸ்லோவின் ரூஸ்வெல்ட்டின் ஆய்வினைப்போலவும், ஹோமியோ ஆளுமை பகுப்பாய்வுகளும் தோன்றின. ஹிட்லர், மண்டேலா, காந்திஜி ஆகிய வரலாற்று நாயகர்கள் வெவ்வேறு மருந்துகளின் ஆளுமையாக விளக்கப் பட்டனர்.

உளவியல் சிகிச்சைக்கு சாட்ச்சியங்களாக கார்ல் ரோஜர்ஸ் காலம் தொடங்கி பெருமாளவில் வீடியோ பதிவுகள் நிகழ்த்தப்பட்டன. இதே முறைமை ஹோமியோபதியிலும், அனைத்து முக்கிய துயரர் சரிதைகளும், கானொளிப் படங்களாக சாட்சியம் தருகின்றன. பன்னாட்டு ஹோமியோ ஆராய்ச்சிக் கருத்தரங்கங்களில் இவை முன்னிலை பெறுகின்றன.

ஃப்ராய்டின் மனத்தற்காப்புக் கருதுகோள்களான, மறுத்தல், இடம்பெயர்த்தல், பிறர் மேலேற்றிச் சொல்லுதல், அடக்குதல் போன்றன, ஹோமியோபதியில் முக்கியம் பெற்று, ஆளுமையின் அடுக்குகளை விளக்கவும், மனதின் தந்திர முக்காடுகளை ஊடுருவி, பிளவுண்ட மனதின் நோய்க் கூறுகளைப் புரிந்து கொள்ளவும் மருத்துவர் ராஜன் சங்கரனால் புதிய பயன்பாட்டுக் கொள்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இலக்கிய வெளியில், இத்தாலியப் படைப்பாளி ப்ரைமோ லெவி தனிம அட்டவணை நாவல் படைத்தது போல்(21 கதைகள், வெவ்வேறு தனிமங்களின் பெயரில்) ஹோமியோ மேதைகள் ஜான் ஸ்கால்ட்டனும், ராஜன் சங்கரனும் தனிம அட்டவணையை, மனித ஆளுமையின் வளர்ச்சிக்கட்டங்களாக வடித்தனர். தனிம அட்டவணையின் 7 கிடைமட்ட வரிசைகளும், 18 செங்குத்துத் தூண்களும், வளர்ச்சிக் கட்டங்களாகப் பிரதி நிதித்துவம் பெற்றன. இப்பயன்பாட்டுக் கொள்கையை, ஆராய்ந்து பார்த்தால், ழான் பியாகட்டின் 8 குழவி (ஸைக்கோ- ஸோஷியல்) வளர்ச்சிக்கட்டங்களும், ஃப்ராய்டின் வளர்ச்சிக்கட்டங்களின் தாக்கமும், குறிப்பாக எரிக்ஸனின் அடையாளச் சிக்கல், மூன்றாம் கிடைமட்ட வரிசையில் முதன்மை பெறுவதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஃப்ரென்ச் ஹோமியோபதியர் மற்றும் உளவியல் நிபுணரான தீதியர் க்ராண்ட் ஜார்ஜ் சிறார் ஹோமியோபதி மருத்துவத்தில் ஈடிபஸ் சிக்கல், சுய மோகம், வாய்த்தேக்கம், குதத்தேக்கம், குறித்தேக்கம் ஆகிய கருதுகோள்களை கையாளுவதன் மூலம், மருந்தினைத் தெரிவு செய்கிறார். இதுவரை மருந்தினை விளக்க மட்டுமே பயன் பட்ட கருதுகோள்கள், ஒரு திடீர்ப் பாய்ச்சலாக மருத்துவ சிகிச்சையில் ஊடும் பாவுமாகப் பயன் படுகிறது.

யூங்கின் தாக்கம் இளைய ஹோமியோபதியர்களான ஜேன் சிக்கெட்டி, ஃபிலிப் எம் பெய்லி இருவரிடமும் சிறப்பாகக் காணப்படுகிறது. சிக்கெட்டி, முழுக்க முழுக்க யூங்கின் கருதுகோள் அடிப்படையிலே துயரர் சரிதை ஆய்வு நடத்துகிறார். சிலந்தி ஆர்க்டைப்பில், ஆரானியா டையாடிமா மருந்தினைத் தெரிவு செய்கிறார். பதுங்கிக் கொட்டும் தேள் ஆர்க்டைய்ப்பின் அடிப்படையில் அண்ட்ரோக்டோனஸ் மருந்தினைப் பரிந்துரைக்கிறார்.

பெய்லி, யூங்கின் கூட்டு நனவிலி மனதின் அடுக்குகளை ஆய்வு செய்கிறார். ஒவ்வொரு மருந்திலும், பல அடுக்குகள் கிடைக்கின்றன. இதுவரை ஒற்றை அல்லது இரட்டைப் பரிமாணங்கள் கொண்டதாக அறியப் பட்டிருந்த ஸல்ஃபர், பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கப் படுகிறது. பூனைப் பால், யானைப்பால், புலிப்பால், நாய்ப்பால், கழுதைப்பால், டால்ஃபின் பால் போன்ற பால் மருந்துகள் ஆர்க்டைப்பாக விளக்கம் பெறுகின்றன. தாய்—குழவி உறவுப் பிணைப்பு ஹோமியோ உளவியலில் முக்கிய கருத்தாக்கமாக தோற்றம் கொள்கிறது. நோய்க் காரணியாகவும், ஆளுமைச் சிதைவுகள் ஏற்படுத்தும் காரணிகளாகவும் அமைகிறது.

இதுவரை சிறப்புக் கவனம் பெறாதிருந்த, ஆட்டிஸம் நோய், கவனக் குறைவு உளவியல் நோய் போன்றன முன்னகர்ந்து, ஹோமியோ விழுமியமாக சிகிச்சைக் குவிமையமாகிறது. தனிம அட்டவணை முறைமை ஆய்வின் வாயிலாக புத்துருவாக்கம் பெற்ற ஹைட்ரஜனும், ஹீலியமும், லித்தியம் பாஸ் மருந்துகள் வளர்ச்சிக்கட்டங்களின் தேக்க நிலையாகப் புரிதல் பெற்று, ஆட்டிஸம், ஏ.டி.ஹெச்.டீ நோய்களுக்கு சிறப்பு மருந்தாகின்றன. ஸ்கால்ட்டன், டைனஸ் ஸ்மிட்ஸ், அமி லான்ஸ்கி போன்ற ஹோமியோபதியர்கள் உலகக் கவனத்தை ஈர்த்திருக்கின்றனர்.

உளவியலின் தாக்கம், துயரர் சரிதை கேட்பு முறையினையே மாற்றி விட்டது. வழமையான ரெபர்டரைசேஷன் பின்னகர்ந்து விட்டது. புதிய தீம்களின்(கருக்களின் அல்லது திணைகளின்) அடிப்படையில் மருந்துகள் தெரிவு செய்யப்படுகின்றன.

முத்தாய்ப்பாகச் சொல்லப்போனால், மும்பை ஹோமியோபதியர் திவ்யா சாப்ரா, தான் முற்றிலுமாக ஃப்ராய்டின் உளவியல் பகுப்பாய்வு முறைமையான ”கட்டற்ற பேச்சு “ முறையையே பின் பற்றுவதாக அறிவிப்பு செய்வது, ஹோமியோபதியின் மீதான உளவியல் தாக்கத்தைப் பறை சாற்றுகிறது என்று சொன்னால் மிகையாகாது.

ஆக, உளவியல் நந்தவனத்தில், ஹோமியோ வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துப் பறக்கின்றன.

பிறிதொரு சமயத்தில், கரேன் ஹார்னி, மலானி க்லெய்ன், அன்ன ஃப்ராய்ட் போன்ற பெண் உளவியலாளர்களின் தாக்கம் எவ்வாறு ஹோமியோபதி அறிவியலில் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்ச்சிக்கலாம்.

No comments:

Post a Comment